Saturday, October 24, 2009

குப்புறக்கிடந்தால் சுவாசமே சுமைதான்



படுக்கையில் கிடந்தபடி

பாதை கேட்காதே

எழு….. உடல் முறித்து,

பத்தடி நட.

பாதை தெரியும்.

குப்புறக் கிடந்தால்

சுவாசமே சுமைதான்.


திரும்பிப் பார்.

விடுதலைக்காக கடந்த

தணற்காடுகளும், சதுப்பு நிலங்களும்

பார்வையில் புலப்படும்.

தணற்காடுகளில் தீய்ந்தபோது

நெஞ்சம் வேகியது

சதுப்பு நிலங்களில் புதைந்தபோது

சலனம் ஆடியது.

மீள எழவில்லையா?


களத்திலேயே மீண்டெழுந்த

உனக்கு புலத்திலேன் தடுமாற்றம்?

போராட்டக்களம் மாறியிருக்கிறது.

இப்போது சூறாவளி அவ்வளவே.


ஒட்டுமொத்த இன அழிப்பை

உலகம் கணக்கெடுக்கிறது.

துயர் கொல்லுதென்று

நீ முடங்கிவிட்டால்

இழப்புகள் கூட

மௌனித்துப் போகும்.


அழுவதாகிலும்...

அம்பலத்தில் நின்று அழு.

இது உனக்கு மட்டுமான வலியல்ல

நம் இனத்திற்குத் திணிக்கப்பட்ட பெருநோ.


நீட்டிப் படுத்திருந்தால் நீதி கிடைக்காது.

எத்தனை பெரிய துயரில் இருக்க

இரக்கமில்லாமல் எழுதுகிறாய்

இழந்திருந்தாலே உனக்குத் தெரியுமென்பாய்.


முள்ளிவாய்க்காலில் மட்டுமா இழப்பு?

முள்ளு வேலிக்குள் தொடர்ந்தே செல்கிறது.

உருகும் விழிநீரில் நீ புதையுண்டால்

பெருகும் துயர் தீர்க்கப்

போராடுவது எப்படி?


விழி நீரை விரட்டு.

வேதனையை உரமாக்கு.

எழு தீயில் ஒளியேற்று.

ஓர்மத்தை நிறமாக்கு.

உயிருக்கு ஆணையிடு.

இவ்வளவும் போதும்.

உணர்வாய். நீயே வழிகாட்டி.

1 comment:

  1. மறக்கமுடியாத ஆனால் நினைத்துப்பார்க்க முடியாத நிகழ்வுகளை சில வரிகளாக முடக்கியுள்ளீர்கள் சஹாரா.
    பாராட்டுக்கள்!

    ReplyDelete