மரணத்தை மீறி எழுகிறது எம்வாழ்வு
ஓ..மனிதமே!
இது ஈழத் தமிழினத்தின் இக்காலக்கதை
கண்ணெதிரே இனவாதம் கடித்துக் குதறும்
ஓரினத்தின் குருதி தோய்த்தெழுதும்
எழுதுகோல் கொந்தளிக்கும் உண்மைக்கதை
உலக வல்லாதிக்கத்தின்,
அவலம் உணராக் கோட்பாடுகளும்,
ஆயுதப் பரீட்சிப்பும் தொடர்கதையாக
எம்மீது எழுதப்படுகின்றன.
தொடரும் போரும்,
கந்தகத்தோடு உழலும் வாழ்வியலும்
பொருத்தமில்லாச் சமன்பாடுகளும்
எம்மை நோக்கித் திணிக்கப்படுகின்றன.
எங்கள் சுயமும், எமக்கான வாழ்வும்
மறுக்கப்படுகின்றன.
குரல்கள் ஒடுக்கப்படுகின்றன
ஒரு இனவாதத்தின் படர்கை
எம் வரலாறுகளை தீய்த்து மறைக்கிறது.
முற்றுப் பெறாத கால நீட்சியில்
எம்மினத்தின் வாழ்வு ஏளனத்திற்குள்ளாகிறது.
வெற்றிக் களிப்பில் கூத்தாடும் எதிரியின் ஆட்டம்
உசுப்பி எம்மை உக்கிரப்படுத்துகிறது.
ஒடுக்குதற்கெதிரான நிமிர்வு
வியாபித்து எங்கும் நிறைகிறது.
விடுதலைச் சுடரின் ஒளியில் சுதந்திர வாசனையை
எம் வாசல் நோக்கி அள்ளி வருகிறது காற்று.
அற்றதொரு பொருளுக்குள் புதையும் சுயம்
அடங்காச் சினமாக அவதாரம் எடுக்கிறது.
வெறுமையும் விரக்தியும் வைரம் பாய
மரணத்தை மீறி எழுகிறது எம்வாழ்வு.
Saturday, October 24, 2009
உலக வல்லாதிக்கத்தின் அவலம் உணராக் கோட்பாடுகளும், ஆயுதப் பரீட்சிப்பும் தொடர்கதையாக எம்மீது எழுதப்படுகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment