Saturday, October 24, 2009

அரவி அரவித் தகிக்கும் சுகிப்பில் இரைமீட்டிகள்



செக்கில் கட்டிய மாடுகள் சுற்றின.

போராட்டம் முடிச்சவிழ்த்தது.

பழக்கத்திலிருந்து விடுபடாமல்

செக்கையே திரும்பத் திரும்பச் சுற்றின.

முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டிருப்பதை

உணர்த்தியபடியே போராட்டம் வளர்ந்தது.


அருகாமையில் குண்டுகள் வீழ

சிதறித் திக்கெட்டும் பிரிந்தவை

பசுமை வெளிகளையும்,

பனிபடரும் குளுமை தேசங்களையும்

தம் வாழ்விடங்களாக மாற்றிக் கொண்டன.


ஈழச்சமூகத்திலிருந்து அகற்றப்பட்ட ஒன்றை

இருப்பதாய் உரைக்கும் பழையவை.....


புலம்பெயர்விலும்

முப்பது ஆண்டுகளுக்கு பின்னோக்கிப் பேசும்

வழமையில் இருந்து மாற்றமடையாது

முடிச்சுகளுக்குள் தத்தம் கழுத்துகளை நுழைத்து

அரவி அரவித் தழுவும் சுகிப்பில் திளைத்தபடி

இன்னும் இரைமீ்ட்கின்றன.


நாகரீக வெளிகளின் மெருகேற்றலில்

செக்கிழுப்புகள் பரவுகின்றன.

சரி,......

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுங்கள்.


அத்தனை பேரும் உத்தமர்தானா?

அடுத்த தலைமுறை கேட்கும்.

No comments:

Post a Comment