Showing posts with label எழுச்சி. Show all posts
Showing posts with label எழுச்சி. Show all posts

Saturday, October 24, 2009

வல்லமையின் குரல் நலிந்தால் வளவுக்குயில் பாடாது.

எழுச்சி கொள்க கவிஞர்களே!
தாயகமூச்சு எமக்கில்லையா?
ஆயிரம் தடைகளை ஆரும் போட்டாலென்ன?
உன்னிப் பெருமூச்செடுத்து உறவணைக்க எழுந்திடுக.

நோயுண்ணும் உடல் நலித்தும்,
பேயுண்ணும் உணர்வொழித்தும்,
தாய் நிலத்தின் வேதனையை - எம்
தோள் தாங்காதிருக்கும் பாழ்வாழ்வு எங்களது என
வரலாற்று பதிவேட்டில் பதிவிக்கப் போகிறோமா?
கூடாது... கூடவே கூடாது.

முற்றத்து மணற்பரப்பில்
முழுமதியின் எழிலொளியில்,
சுற்றம் சூழப் புற்பாய் போட்டமர்ந்து பேசி,
அடிவளவு மூலையிலே படர்ந்த
முல்லைச் சொதி மணக்கும்
கவளச் சோறெண்ணி,
ஏக்கங்களை மட்டுமே எமதாக்கி,
பனிநிலங்களில் உயிர் தொய்ய வாழ்கிறோமே....
விட்டுவிடுவோமா?

தாய்நிலத்தில் ஏறி நின்று அந்நியன் கூத்தாட
வாயொடுக்கி, மெய் நடுக்கி விதியென்று கிடந்திடவோ?....
புலம்பெயர்ந்து கிடந்தாலும் புலன் மாறக்கூடாது.

வலியென்று துடித்தாலும்,
'அம்மா" என்றழைத்து விழுந்து புரண்டாலும்
எமைத் தாங்கிப் பிடிக்கின்ற தாய்மடியைத்
தவிப்பெய்த விட்டிடவோ....
தமிழச்சாதியாய் தரணிக்குள் பிறப்பெடுத்தோம்?

வாகை சூழ்ந்திருக்கும்,
வன்னிமேனியிலே சோகம் படர்ந்திடுமோ?

வாயாரத் தமிழ் தொடுத்து வல்கவிகள் நல்கும் கவிமுரசுகளே!
காலம் எம் காலடியில் கைகட்டி நிற்கிறது.
வாழ்வை வனைய வல்லமைபூட்டி
எழுதுகோல்கள் எழுந்துதான் ஆகவேண்டும்.
இது காலக்கட்டளையும் கூட..

ஆவி துடித்திருக்கும் விழுதுகளின் ஓரவிழிக்கசிவில்
தாயை மீட்கின்ற பாதிப்பலமிருக்கும் சேதியைக் கூவி முழங்குக.

நிமிர்ந்த தானை செருக்கோடு தலைவன் வழி தொடருகையில்
மேதினி வாழ் தமிழின் போர் முரசங்கள்
மேனி நுடங்குதல் ஆகாது.

சோகச் சுமை ஏந்தலும், ஓர்மக்குரல் அடைத்தலும்
எழுதுகோல் வல்லமைக்கு இழிவல்லவா...

வல்லமை நலிந்தால் வளவுக்குயில் பாடாது.
வசந்தம் தாய்மண்ணைத் தழுவி மகிழாது.
முற்றத்து மலர்களால் முகம் சிவக்கமுடியாது.

போர் மூசிய பேய்க்காற்றை எதிர்கொள்ளும்
பலம் தர நாமுள்ளோம்.
அஞ்சற்க....என தாயக உறவுகள் நோக்கி
ஆயிரமாயிரம் கவி படைத்து எழுக எம் கவிஞர்களே.

இன்று,
காலக் கட்டளை ஈழத்தமிழரின் திறவுகோல்கள் அற்ற
இதயவாசல்களையும் இடித்துப் பெயர்த்துளது.

பழி சூழும் நிலை எங்கள் பரம்பரைக்கு வந்திடுமோ என
இதுவரை காலமும் விழிமூடி நடித்தோரும் வெம்பி எழுந்துளர்.

உப்புக் காற்றுரசும் ஊர்மடியின் நினைப்பூற,
நேற்றுவரை செக்கிழுத்தோரும் சீற்றத்தில் கனல்கின்றர்.

அள்ளிப்பிடித்திருக்கும் ஆவி ஓய்ந்தால் கொள்ளிக்குத்தன்னும்
குலந்தழைத்தமண் வேண்டுமென சொல்லித் துடிக்கின்ற
சொந்தங்களும் எழுந்துளர்.

பள்ளிக் காலத்தில் பதிவிட்ட சித்திரத்தை
சில்லுருட்டி விளையாடிய செம்பாட்டுப் புழுதிமண்ணை
கல்லுக்குத்தி வைத்த தேர்முட்டி மூலைகளை
எண்ணி மகிழ்வோரும் எழுச்சியுற்று விரிந்துள்ளர்

எனும் சேதிகள் எங்கள் சொந்தங்களைச் சென்றடைய வேண்டும்.

வல்லமையின் குரல் நலிந்தால் வளவுக்குயில் பாடாது.
வசந்தம் தாய்மண்ணைத் தழுவி மகிழாது.
முற்றத்து மலர்களால் முகம் சிவக்கமுடியாது.

நோயுண்ணும் உடல் நலித்தும்,
பேயுண்ணும் உணர்வொழித்தும்,
தாய் நிலத்தின் வேதனையை - எம்
தோள் தாங்காதிருக்கும் பாழ்வாழ்வு எங்களது என
வரலாற்று பதிவேட்டில் பதிவிக்கப் போகிறோமா?
கூடாது... கூடவே கூடாது.

மனைகளின் முகப்புகளையே மயானங்களாக்கி சிதைகளை மூட்டிய வரலாறு எமக்குண்டு.

விழுகை என்பது விதிப்படியும்

எழுகை என்பது வினைப்படியும்

நிகழ்ந்தே ஆகவேண்டும்.


நேற்றொரு நாள்

சத்திய வேள்வியில் திலீப சொரூபம் தீய்ந்த போது

கண்ணீரில் கருத்தரித்தது கால நெருப்பு


இந்தியப்பூதத்தின் பொம்மலாட்டம், புனைவெல்லாம்

விடுதலைத் தழலில் வெந்து போயின.


சத்திய வேள்வி சாகாவரம் பெற்றது.

இந்தியத்தை விட்டு

காந்தீயம் கப்பலேறிக் காணாமல்போனது.


இனத்தின் நித்திய வாழ்வுக்கு

நிம்மதியைக் கேட்ட சத்தியத்தேவன்

சருகாய் உலர்ந்து உயிர் களைந்தான்.


பிராந்திய வல்லரசின் சூழ்ச்சி

தோற்றதன் எதிரொலியை

ஈழத்தின் முற்றம் வடுக்களாய் ஏந்தியது.


மக்களின் தோள்களே மண்மீட்பைச் சுமந்தன.


ஒப்பாரியின் உள்ளொலியில்

பறைகளும் முரசுகளும் அதிர்ந்தன.


கால நெருப்பை ஏந்திய கண்களே

காவல் தெய்வங்கள் ஆயினர்.


அடைக்கலம் தந்த உறவுகளே

ஆற்றல்களையும் வழங்கினர்.


இன்னலைச் சுமந்த இருப்புகளே

ஈழத்தை மனதில் ஆழப்படுத்தின.


முகாரிகளை இசைத்தபடியே

புல்லாங்குழல்கள் பூபாளத்தை நோக்கி நகர்ந்தன.


பிணம் புழுத்த வீதிகளிலேயே

பிரசவங்களும் உதிரத்தைப் பாய்ச்சின.


மனைகளின் முகப்புகளையே மயானங்களாக்கி

சிதைகளை மூட்டிய வரலாறுகள் தோன்றின.


எண்ணிக்கையற்ற வலிகளைச் சுமந்தும்

எழுகையே எங்களின் இருப்பை வனைந்தது.


இன்றைகள் மட்டுமேன்....

துருவ முனைகள் வரைக்கும்

உறைந்து கிடக்கிறது மூளா நெருப்பு!


பூபாளத்தை மறந்து புல்லாங்குழல்கள்

முகாரிகளையே முழுமை என்கின்றனவே!!!


ஒலியை இழந்தால்

பறைக்குப் பெருமையில்லை


பாதி வழியில் நின்று விட்டால்

பயணத்தில் முழுமையில்லை


விதியென்று ஓய்ந்து விட்டால்

மதியிருந்தும் பலனில்லை


விழல் என்று முடிவெடுத்தால்

விடுதலைக்கு இடமில்லை


நித்திய வாழ்வுக்காய்

நிம்மதியைக் கேட்ட இனம்

சத்திய வாழ்வின் சருகாகிக் கிடப்பது

காலநீட்சியின் காட்சி ஆதல் கூடாது


மாற்றமே இல்லாதது மண்மீட்பு.


மீட்சியின் திசையில் காற்றெழும் காலமுணர முடியாமல்

தத்தளித்து நிற்பது எவருக்கும் இயல்புதான்


கடந்த காலத்தின் நீட்சியை ஒரு கணம்

காட்சிப்படுத்தல் காலத்தின் அவசியம்.


மீண்டும்…..

கண்ணீரில் கருத்தரிக்கட்டும் காலநெருப்பு.

குப்புறக்கிடந்தால் சுவாசமே சுமைதான்



படுக்கையில் கிடந்தபடி

பாதை கேட்காதே

எழு….. உடல் முறித்து,

பத்தடி நட.

பாதை தெரியும்.

குப்புறக் கிடந்தால்

சுவாசமே சுமைதான்.


திரும்பிப் பார்.

விடுதலைக்காக கடந்த

தணற்காடுகளும், சதுப்பு நிலங்களும்

பார்வையில் புலப்படும்.

தணற்காடுகளில் தீய்ந்தபோது

நெஞ்சம் வேகியது

சதுப்பு நிலங்களில் புதைந்தபோது

சலனம் ஆடியது.

மீள எழவில்லையா?


களத்திலேயே மீண்டெழுந்த

உனக்கு புலத்திலேன் தடுமாற்றம்?

போராட்டக்களம் மாறியிருக்கிறது.

இப்போது சூறாவளி அவ்வளவே.


ஒட்டுமொத்த இன அழிப்பை

உலகம் கணக்கெடுக்கிறது.

துயர் கொல்லுதென்று

நீ முடங்கிவிட்டால்

இழப்புகள் கூட

மௌனித்துப் போகும்.


அழுவதாகிலும்...

அம்பலத்தில் நின்று அழு.

இது உனக்கு மட்டுமான வலியல்ல

நம் இனத்திற்குத் திணிக்கப்பட்ட பெருநோ.


நீட்டிப் படுத்திருந்தால் நீதி கிடைக்காது.

எத்தனை பெரிய துயரில் இருக்க

இரக்கமில்லாமல் எழுதுகிறாய்

இழந்திருந்தாலே உனக்குத் தெரியுமென்பாய்.


முள்ளிவாய்க்காலில் மட்டுமா இழப்பு?

முள்ளு வேலிக்குள் தொடர்ந்தே செல்கிறது.

உருகும் விழிநீரில் நீ புதையுண்டால்

பெருகும் துயர் தீர்க்கப்

போராடுவது எப்படி?


விழி நீரை விரட்டு.

வேதனையை உரமாக்கு.

எழு தீயில் ஒளியேற்று.

ஓர்மத்தை நிறமாக்கு.

உயிருக்கு ஆணையிடு.

இவ்வளவும் போதும்.

உணர்வாய். நீயே வழிகாட்டி.

பொன்னள்ளிச் சொரியும் பெரிய தேவனே! உன்னை இனி நானே பாடுவேன்


கண்ணெதிரே கலையுமா கனவு?

மண்ணெனவே உதிருமா மனது?

நெஞ்சுக்குள்ளே கோடிட்ட உருவம்

ஒப்பேற முன்னரே உருகியா போகும்?

இருள் விலகமுன்னமே உருகி அழிந்திட

மெழுகுவர்த்தியா எங்கள் சுதந்திர வேட்கை?


இது காலச்சுழி

சுழற்சியில் சிக்குறுதல் இயல்பு. எனினும் சோரக்கூடாது.

சுழலின் வேகம் நீளாது திடீரென்று அடங்கும்.

தட்டாமாலை சுற்றிவிட்டு தொப்பென்று போட்டுவிடும்.

நம்பிக்கை இருந்தால் மட்டுமே நாம் பிழைக்க முடியும்.

மயக்கமின்றி கால்கள் நிலை கொள்ள வேண்டும்.

மனம் சோர்ந்தால் மயக்கம் மடியேறி மகுடியூதும்.

உறக்கம் உச்சந்தலையில் உட்கார்ந்து கொள்ளும்.


இன்றைய பொழுதுகள் எமக்கானவை.

ஊர்கூடி இழுத்த விடுதலைத்தேர்

முக்காற்சுற்று முடித்துவிட்டது.

சில அதிவிவேகிகள் ஆரம்பப் புள்ளிக்கு

பின்னோக்கி விட்டதென்று அதிவேகமாக அலம்புகின்றர்.

காது கொடுக்காதே.. கலங்கிப் புலம்புவாய்.


நம் கையில் வாழ்வு வசப்பட்டே ஆகவேண்டும்.

மாவீரத்தோள்கள் சுமந்த வரலாற்றை

முனை கூர்த்தி நகர்த்தியே தீரவேண்டும்.

ஆழக்கிணறு வெட்டி ஊற்றுவாயை அண்மித்துவிட்டு

உடல் நோகுதென்று உடைந்து போகக் கூடாது.

வெம்பிச் சோர்தல் வேதனையைத் தீர்க்காது.


என்ன இருக்கிறது?

எல்லாம் துடைத்தழித்து நகைக்கிறது பகைமுகம்.

உயிர்கூடு ஒன்றுதான் மீந்துபோய் உள்ளது.

அச்சப்பட்டதற்காய் அங்கெவரும் காப்பாற்றப்படவில்லை.

அடிமைகள் ஆக்கப்பட்டுள்ளர்.

உறவுகளைத் தினம் நினைத்து நீ உக்கி கிடப்பதனால்

உந்தி எழும் வல்லமையின் உறுதியை தொலைத்துள்ளாய்.

கண்ணுக்குத் தெரியாமல் பகை உன்னைக் கட்டிப்போட்டுளது.


மெய்யுரைத்துத் தீக்குளிக்கும் தைரியம் பெறு.

புலத்திற்குள் பொருந்திக் கொள்.

புலன் தெளிவுறு.

உன் புன்னகையைப் பறித்துப் புதைகுழியில் இட்டோர்க்கு

எண்ணிப்பார்க்காத கண்டத்தை உருவாக்கு.

கால எழுதியிடம் புதுக் கணக்கை திற.

ஊர் மனையேறியே உறங்குவதாய் சபதம் எடு.

ஏழ்புரவி ரதத்தினிலே எழும் தேவன்

பஞ்சபூதங்களாய் பலவழிகள் திறந்துள்ளான்.

அவன் ஆசி பெற்ற பெரும் யாகமிது.

அழிவுற்றுப் போகாது.


பொன்னள்ளிச் சொரியும் பெரியதேவனே!

உன்னை இனி நானே பாடுவேன்.

அன்னை தமிழ்கொண்டு உன்னைப் பண்செய்த

என் ஆசான் மீண்டுவந்து அடுத்தபாடல் செய்யும்வரை

உன்னை இனி நானே பாடுவேன்.

என்வேர் மடியைக் கிழிந்துவதம் செய்யும்

கொடும் பகையே உனை எதிர்க்க நானே கோலோச்சுவேன்.

விழுதனைத்தும் பிணைத்து, வேர்நிலத்தில் ஆழப்படர்த்தி,

மீண்டெழும் மிடுக்கை மிகைப்படுத்துவேன்.

புலம்பெயரிதான் இருப்பினும் என் பொல்லாப் பொறியின்

கூர் உனை பொசுக்கும்.


பொன்னள்ளிச் சொரியும் பெரியதேவனே!

உன்னை இனி நானே பாடுவேன்.

அன்னை தமிழ்கொண்டு உன்னைப் பண்செய்த

என் ஆசான் மீண்டுவந்து அடுத்தபாடல் செய்யும்வரை

உன்னை இனி நானே பாடுவேன்.

பந்தயக்குதிரைகள் ஓடிக்களைக்கட்டும் இரண்டு பரிகளில் கால்கள் பரப்பிய ஒற்றைப்பாகன் இடறி விழும்வரை காத்திருப்போம்.

வசந்தம் தாய்மண்ணைத் தழுவாமல் போகிறது.

வாய்கள் பல இருந்தும் மௌனத்தில் நோகின்றன.

எரிக்கும் நெருப்படக்கி இனமொன்று வேகிறது

எதுவரைக்கும் தான் முடியும்?

எழும்போது உலகம் தெளியும்.


வளவுக்குயில்கள் குரலிழந்து போயுளன.

வாசக் காற்றும் கந்தகத்துள் தோய்ந்துளது.

உப்புக்கடல் எழுந்த ஒப்பாரிப் பேரலைகள்

கொட்டிய மனித சாம்பலுடன் கரைந்துளன.



முற்றத்து மலர்களை முட்செடிகள் கிழித்துளன.

மூசிய பேய்க்காற்றில் ஊர்களெலாம் தீய்ந்துளன.

செத்தகூடுகள், சிதைந்த உறுப்புகள்

நச்சுக் காற்றினால் வீழ்த்திய மெய்களென

வல்லரக்கத் தனத்திற்கு வெள்ளோட்டம் முடிந்துளது.


எண்ணிப் பார்க்குமுன்னே ஏதேதோ நடந்துளன.

சொந்தமண் இப்போது சோகத்தில் தவித்துளது.

ஆறாப் பெருந்துயரில் அள்ளுண்ட பெருஞ்சனம்

பட்டிகளில் அடையுண்டு,…. மானுடம் மக்கி,

மண்தின்னக் கிடக்கின்றர்,



கந்தகப் பெருமழையில் கலங்காத பெருநெஞ்சுகள்

கந்தலில் நைந்து கசங்கிக் கிடக்கின்றன.

விடுதலைக்கு முரசறைந்த மானிட வாழ்வு

பேரரசுப் போட்டிகளில் புண்பட்டு உழல்கிறது.

ஒரு சொட்டு நீருக்காய் ஓர்மச் சினம் ஒறுத்து

உறவுக் கொடியெல்லாம் மெய் கூனித் தவிக்கின்றர்

நெஞ்சக் கூட்டறைக்குள் பொத்திவைத்த அத்தனையும்

பித்தச்சுனை வெடித்த எரிமலையில் கரிகின்றன.


ஐ.நா அம்பலத்தில் அம்மணமாய் ஆடியதில்

இந்தியப் பெருநாடே இறுதிச் சுற்றில் நிலைத்தது.


இவற்றிற்கெல்லாம் தீர்வெழுத திராணியற்றதான

இயலாமை நடிப்பில்

ஒஸ்கார் விருதை உலகமே பெற்றுளது.


மனித நேய ஆடை மதிப்பற்றுக் கிடக்கிறது.

இனி ஒரு விதி செய்தல் எமக்குரித்தாயுளது.


இனத்தைக் கருவறுத்தால்… ஈழம் பிறப்பற்றுப் போகுமோ?

அனைத்தும் இழந்திழந்தே அன்றும் வலுவுற்றோம்.

இனத்தை கருவறுத்தால் இன்னும் பெருக்கெடுப்போம்.



அகழான்கள் குடைந்தெடுத்தால்…

ஆடுகால் பூவரசும் அடிசெத்து போயிடுமோ?



விழுதுகள் இறங்கும்.,

குடைந்த இடமெல்லாம் வேர்பரப்பும் வேகத்தில்

அகழான்கள் வெளியேறும்.,

இல்லை அடியினில் நசுங்குண்டு சாகும்.


இனத்தை அழிக்க துணைபோன கோட்டான்களுக்கு

இந்திர விழா முடியத்தானே இழவுகள் புரிய வரும்.

கனத்த பெரு வெளியின் கானலை நம்பி

இருக்கும் எச்சிலையும் இழுத்துத் துப்பட்டும்.


அறுபது ஆண்டுகளாய் பட்டதெல்லாம்

இணைத்து இன்னும் ஆறுமாதத்திற்காகினும்

அவலத்தைச் சுமந்துதான் ஆகவேண்டும்.

பந்தயக் குதிரைகள் ஓடிக் களைக்கட்டும்.

இரண்டு பரிகளில் கால்களைப் பரப்பிய

ஒற்றைப் பாகன் இடறி விழட்டும்

இல்லாவிடின்

ஒரு புரவி தடம் மாறட்டும்.


காட்சிகள் மாறுகின்ற வேளைக்காய்

இன்னும் கொஞ்சம் வலிகளில் மூழ்குவோம்.

புதிதென்றால் அல்லவா

நாங்கள் பொலபொலவென்று அழுது தீர்க்க……

பழகி விட்டது.

தேடற்கவியின் உழல்வை இதயக்குழி உள்வாங்க உயிர்ப்பின் மூச்சு ஓசோன் ஓட்டையாக..



தேடற்கவியின் உழல்வை

இதயக்குழி உள்வாங்க

உயிர்ப்பின் மூச்சு

ஓசோன் ஓட்டையாக…


காலம் எழுதியின் கவனப்பிழை

கருப்பைச் சுவர்களில் விசமுட்களாய்…

தரித்த குளவியின் பாதி உடல்

சீழ்கட்டிப் போய் சிகிலமாக…

பிணவாடை, கொள்ளை கோமாரி

ஐயோ….

பச்சை உடம்புக்காரி படுக்கையிலே….


காலம் எழுதியை அழைத்து வருவீர்.

வனையும் சூட்சுமத்தை வசீகரித்து

கால் செருப்பாக்கி

கொப்பளிக்கும் கானல் வெளியில்

கிடந்துழலும் மனிதர்களின்

வேதனையை உணர்த்த வேண்டும்.


பாழும் உலகிடையே வாழக் கேட்டு

வெட்கங்கெட்டுக் கிடக்கும் ஆறாம் அறிவு

தேவையற்றதாகத் தீர்மானிக்கப்பட்டாயிற்று.


த்தூ…..

மண்ணாங்கட்டிகளே! குந்தியிருந்து

மணிக்கணக்காப் பேசுக.


எங்கே எவர் தலையில்

குண்டுகளைக் கொட்டலாம்?


இன்னும் குற்றுயிராய், குலையுயிராய்

துடிதுடிக்க வதைத்தழித்து

மந்தைப் பட்டிக்குள் போட்டு மேய்க்க

எந்தச் சனியனுக்குத் திட்டமிருக்கோ

அங்கின போய்க் கொஞ்சிக் குலவுக.


பொட்டைடைக்கண்களுக்கு

அசோக மலர்களிடம் அடங்காத ஆசையோ?

இத்தொப்பி எவருக்கென்று

தொல்பொருள் ஆராய்ச்சி தேவையில்லை


காலம் எழுதிதான் கவனப்பிழை விட்டானென்றால்

கந்தறுந்த மனிதமுமா கண் கெட்டுக் கிடக்கிறது?


கோல விளக்கொளியில் கோலோச்சி வந்த மக்கா!

ஆட்சிக் கதிரைக்கு ஆளாய் பறந்து

அன்னை தமிழுக்கு ஆலவிசம் தந்தனையே….

போதுமப்பு உன் நடிப்பு.,


எல்லை தாண்டி வந்த கேடி

உயிரறுத்து துவசம் செய்தான்.

பள்ளி முதல் பங்கர்வரை

பாழ்படுத்திப் போனான்.

உயிர் கிடந்து உழன்றதனால்

ஊனத்துடன் அழுதலைந்தோம்.

விட்டானா?...

கந்தகக்குண்டுகளில் நஞ்சிருத்தி

கொன்றொழித்தான்

சந்ததி முழுவதையும்

சகதிக்குள் புதைய வைத்தான்.

மந்தைகளாய் அடைத்துள்ளான்.


அவன் சமபந்தி வைப்பானாம்.

சந்தர்ப்பம் பார்த்து சர்ப்பங்கள் ஆடுகின்றன.


வெந்து கிடக்கிறது உள்ளம்.

மீளத் தெளிவு

மிடுக்கெடுத்த நிமிர்விற்காய்

காலமுட்கள் கைநீட்டுகின்றன.


உயிர்த்தெழுக.

பீனிக்ஸ்ஸின் பிறப்புக்கு நாள் குறித்தாயிற்று.