அந்த அகதிமுகாம்கள் இல்லையில்லை
மீட்பர்களற்ற வதைமுகாம்கள்
மின்சார முட்கம்பிகள் சூழப்பட்ட
அந்தகாரத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.
பசி மயக்கத்தில் கேட்பாரற்று
உறவுகளைத் தவறவிட்ட அவலத்தில்
சருகாகின தனிமைக் கூடுகள்.
அட்டதிக்கிலும் முற்றுப்பெறாத ஒப்பாரிகள்
உயிரைப் பிசைந்து உணர்வைக் கரைக்கின்றன.
கூடி அழ ஆளின்றி
மானிட மரணங்கள் மலினப்படுகின்றன.
தன் பிறப்பை மறந்த அன்னையைப் பார்த்து
சிசு கதறிக் கதறி விதி வலிக்கக் கிடக்கிறது.
ஒதுங்கவும் உள்ளுடுத்தவும் வழியின்றி
பெண்மை கறையுற்று நனைகிறது.
மறைப்புகள் அற்ற திறந்த வெளி
இருட்டில் மட்டுமே மானத்தைக் காக்கிறது
அகரத்தை எரிக்கும் அசிட் திரவத்தை
அடிவயிற்றை கிழித்து மிருகங்கள் உமிழ்கின்றன.
நைந்த ஆடையின் கிழிசல்களுக்குள்ளால்
வதையின் ரணங்களை வானமே பார்க்கிறது.
வற்றிய உடல்களை விரித்தும் ஒடுக்கியும்
சுவாசம் பிடிவாதமாய் ஒட்டி அசைக்கிறது.
அக்கினிச் சிறையுடைக்கும் மீட்பர்களுக்காக
மானுட உய்வு காத்துக் கிடக்கிறது.
மானிடத்தின் வரலாற்றைக்,
ReplyDeleteகருவில் சுமந்து,
கல்லறை வரைக்கும்,
காவிச் செல்கிறது பெண்மை!
அதன் உருவம் சிதைந்து,
உணர்வுகள் துகில்கையில்,
அழிந்து சாம்பலாவது,
பெண்மை மட்டுமல்ல!
அது காவிச் சென்ற,
மானிடத்தின் வரலாறும் தான்!