Saturday, October 24, 2009

கூன்படு முதுகுகள் கோணல் நிமிர்த்தக் கொற்றவைத் தமிழே! நற்றுணை பொங்கு


என்னரும் மொழியே! எழில் நிறை கிளியே!

புன்னகை அழகே! பொதிகையின் அரசே!

விண்ணவர் தேவன் விரும்பும் தமிழே!

நின்னடி பணிந்தேன்... தாயே!... என்னுளம் நுழைக!


கங்குல் கரைய, அதிகாலை வெளிக்க,

செங்கதிர் வீசும் சூரியன் சிரிக்க,

தங்களர் வலுவில் தமிழ்மண் துளிர்க்க

தாம் தீம் தோமென தமிழே பொங்கு!


எங்கனும் தமிழின் ஓசை சிறக்க,

ஏதிலி எனும் பேர் காற்றினில் பறக்க,

வங்கப் பரப்பதில் வரிப்புலி சிரிக்க

வண்தமிழ்கொடியே! வனப்புடன் பொங்கு!


மங்கல ஒலியில் மண்மகள் குளிர,

சிங்களச் சேனைகள் செருக்களம் சரிய,

அங்கையற்கண்ணிகள் அரியணை செய்ய

அன்னைத் தமிழே! அமிழ்தெனப் பொங்கு!


வான் புலிச் சிறகுகள் வல்லமை வகுக்க,

தேன்கவிராயர்கள் தீந்தமிழ் செதுக்க,

கூன்படு முதுகுகள் கோணல் நிமிர்த்த

கொற்றவைத் தமிழே! நற்றுணை பொங்கு!


ஈழவர் சேனை இருளது கிழிக்க,

காலர்கள் வேற்றிடம் கதறி ஒழிக்க,

வீழ்ந்தது பகையென முரசுகள் ஒலிக்க,

ஆளும் தமிழே அகிலத்தில் பொங்கு!


வேங்கைகள் மார்பினில் வாகைகள் சூட,

வெற்றித்திருமகன் மகிழ்ந்து உறவாட,

மாங்கனித் தீவுனுள் மகுடம் ஏற்கும்

மண்மகள் போற்றி என்மொழியே பொங்கு!


ஆண்டுகள் பலவாய் ஒடிந்தே கிடந்து,

மீண்டனர் தளையை மிதித்தே எழுந்து,

ஆண்டனர் தமிழச்சாதியென்றே

ஆவி சிலிர்த்திட அமிழ்தே பொங்கு!


வேரும், விழுதுமாய் வீரமண் மீட்பில்

ஏறுபோல் வலுவும், வளமும் இணைத்து

பாரும் இக்கணம் திகைத்திடத் திகைத்திட

பைந்தமிழ் ஈழமே பொங்கு நீ பொங்கு!


கூறு கெட்டவர் கோட்டை ஆள்வதா?

ஊறு செய்பவர் எம் நாட்டை ஆள்வதா?

வீறுகொண்டு எழும் வேங்கை மூச்சிலே

தீர்வெழுதிடும் திறமையே பொங்கு!


கார் எழுதிடும் வாழ்வு விதியென

கவிந்த தலைகள் உயர்ந்து நிமிர்கவே!

போர்வலியது எம் ஊர் குதறவோ...?

தீர்வெழுதிட உலகின் திசைகள் எழுகவே!


ஈழமண்ணதில் கலிகள் பொங்குது

இளைய வேனில்கள் கனலில் வேகுது.

சாகத் துணிந்தவர் தீரம் இன்னமாய்

சமர்க்களங்களில் சரிதம் எழுதுது.


புலம் பெயர்விலே புரட்சி பொங்குக!

நிலத்தைக் காக்கும் நீட்சி பொங்குக!

விரித்த பூமியில் உரத்த குரலிலே

உரைக்கும் செய்தியில் உணர்வு பொங்குக!


கனத்த பொழுதுகள் கிழித்து எறிந்திட,

கவிந்த மாயைகள் விலகிக் கலைந்திட,

தனித்த வாழ்விலும் தமிழர் மிளிர்ந்திட

தாயே! தமிழே!! பொங்கு நீ பொங்கு!

No comments:

Post a Comment